"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

2/26/2015

வலிமார்கள் இறந்த பின்னும் கராமத் நிகழ்த்த முடியுமா?

 பதில் : முடியாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.

நின்று நிலைத்திருக்கும் வகையில் செய்த தான தர்மங்கள், (பிறருக்குக் கற்றுத்தந்த) பயனுள்ள கல்வி, நல்லொழுக்கமுள்ள மக்கள் ஆகிய இம்மூன்றைத் தவிர மற்ற காரியங்கள் மனிதன் இறந்துவிடும்போது முடிவு பெற்று விடுகின்றன. (நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா)

இந்த நபிமொழியிலிருந்து, மரணித்துவிட்டால் உலகில் மனிதன் செய்கின்ற எல்லாக் காரியங்களும் முடிவுக்கு வருவதை உணரலாம். மரணத்திற்குப் பின் எவரும் கராமத் செய்ய இயலாது. மேலும் மரணம் என்பதே இந்த உலகில் மனிதனின் செயல்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதுதானே!

தர்ஹாக்களில் சில அதிசயங்கள் நடக்கின்றனவே என்றால் தர்காவில் மட்டுமல்ல, கோவில்கள், சர்ச்சுகளிலும் தான் நடக்கின்றன. ஓரிறை வணக்கத்திலிருந்து மக்களைத் திசை திருப்பி வழி கெடுப்பதற்காக, ஷைத்தான் செய்யும் திருவிளையாடல்தான். உண்மையான ஈமான் உள்ளவர்கள் இதுபோன்ற சித்து விளையாட்டுக்களில் தங்கள் ஈமானை இழந்துவிட மாட்டார்கள்.

  அவ்லியாக்கள் நித்திய ஜீவன் உள்ளவர்களா?

இந்தப் பிரச்சனையில் சிலர், வலிமார்கள் மரணத்திற்குப் பின்னும் உயிருடன் இருக்கின்றனர் என்றும் வேறு சிலர் இறந்து விட்டனர் என்றும் இரு வேறு கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர். இதில் எது சரியானது என்பதைத் தெளிவாக ஆராய்ந்தாலே இதன் உண்மையை விளங்க முடியும்.

முதலில் (மரணித்த பின்னும்) “உயிருடன் இருக்கிறார்கள்” என்ற கருத்துக் கொண்டோரின் வாதங்களைப் பாாப்போம்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று எண்ண வேண்டாம், அவாகள் உயிருடன் உள்ளனர். இறைவனிடமிருந்து உணவும் அளிக்கப்படுகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அளித்த பேருபகாரங்களை எண்ணி மகிழ்ச்சியல் திளைத்தவர்களாக உள்ளனர்” (அல்குர்ஆன் 169, 170)

அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களென கூறாதீாகள்! அவர்கள் உயிருடன் உள்ளனர். எனினும் அதனை நீங்கள் உணர இயலாது” (அல்குர்ஆன் 2 -154)

மேற்கூறிய இரண்டு ஆயத்துகளும் (திருக்குர் ஆன் வாக்கியங்களும்) அவர்கள் உயிருடன் உள்ளனர், என்ற கருத்தை மிகத் தெளிவாக பறை சாற்றுகின்றன. திருக்குர்-ஆனே இவ்வளவு தெளிவாகக் கூறும்போது நாம் எப்படி மறுக்க இயலும்? என்பது முதல் சாராரின் வாதம். மேலும் கப்ருகளை (மரித்தவர்களின் அடக்க ஸ்தலங்களை) நாம் காணும்போது, “அஸ்ஸாலாமு அலைக்கும்” என்று கூற வேண்டும், என்று ஹதீஸீல் வருகின்றது. “ஸலாம்” உயிருள்ளவர்களுக்குத்தானே சொல்ல முடியும்! அதனால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது சந்தேகத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது என்று கூறுகின்றனர்.

‘இந்த ஆதாரங்கள் சரியானது தானா?’ என்பதை நாம் ஆராய்வோம். மேற்கூறிய ஆயத்துகள் எப்பொழுது, எதற்காக இறங்கியது என்பதைக் கவனித்தால் தான் அதன் முழுப் பொருளைப் புரிந்து கொள்ள முடியும். பத்ருப் போர்க்களத்தில் சில சஹாபாக்கள் (நாயகத்தோழர்கள்) ஷஹீதாக்கப்பட்ட (வீர மரணம் அடைந்த) நேரத்தில் காபிர்கள் “இந்த முகம்மது அப்பாவி மக்களை தேவை இல்லாமல் பலி கொடுக்கிறாரே, எந்தவித பயனுமில்லாமல் அவர்களின் வாழ்வு வீணடிக்கப்படுகின்றதே” என்று குறை கூறியபோது அவர்களுக்கு பதில் தரும் விதத்தில் இந்த வசனங்களை அல்லாஹ் இறக்கினான். “நீங்கள் நினைப்பது போல் அவர்கள் வாழ்வு பயனற்றுப் போய்விடவில்லை. உங்களால் உணரமுடியாத வேறொரு விதமான வாழ்க்கை வாழ்கிறார்கள்” என்ற பொருள்பட கூறுகிறான். இரண்டாம் ஆயத்தில் “அஹ்யாவுன் இன்தரப்பிஹிம்” என்ற சொல்லை இணைத்திருக்கிறாாகள். அதாவது இறைவனின் கண்ணோட்டத்தில் அவர்கள் உயிருடன் உள்ளனர் (உங்கள் கண்ணோட்டத்தில் அல்ல என்ற பொருள்பட)

“காபிர்களே! நீங்கள் நினைப்பதுபோல் அவர்கள் வாழ்வு பயனற்றுப் போய்விடவில்லை. மாறாக! அவர்களுக்கு வேறுவிதமான உணவுகள் வழங்கப்படுகின்றன. அந்த மகிழ்க்சியில் அவர்கள் திளைத்துள்ளனர் என்ற பொருள்பட அல்லாஹ் அவர்களுக்கு பதில் கூறுகிறான். (திருக்குர்ஆனுக்குப் பொருள் கொள்ளும் போது எதற்காக எப்போது அந்த வசனம் இறங்கியது என்பதையும் கருத்தில் கொண்டு தான் விளக்கம் தர வேண்டும் தஃப்ஸீரின் வீதி)

எனவே அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் நம்மில் சிலர் நினைப்பது போல் “நாம் பேசுவதை கேட்பார்கள், நமக்கு பதில் தருவார்கள், நாம் அங்கே செல்வதை உணர்ந்து கொள்வார்கள்” என்பதும் அதன் பொருள் அல்ல.

அந்த காஃபிர்கள் நினைத்தது போல் “மறுஉலக வாழ்க்கை கிடையாது, அவர்கள் மரணித்தவுடன் எல்லாமே முடிந்துவிட்டது

மறு உலக சுகங்கள் கிடையாது” என்பதுவும் அதன் பொருள் அன்று.

மாறாக, மனிதர்கள் கண்ணோட்டத்தில் ‘உலகத்துடன் உள்ள தொடர்பைப் பொறுத்தவரையில் அவர்கள் மரணித்துவிட்டால் அல்லாஹ்விடம் வேறொரு விதமான வாழ்க்கை அவர்களுக்கு உண்டு என்பது தான் இந்த ஆயத்துகளின் உண்மைப் பொருள்.

அதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அந்த நல்லவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவை ரூபத்தில் சுவர்க்கத்தில் திரிகின்றன”. (முஸ்லிம்) என்று விளக்கம் தந்தனர். நம்மில் பல எண்ணிக் கொண்டிருக்கின்ற பொருளில் அல்ல என்பதை இந்த ஹதீது மூலம் தெரியலாம்.

கப்ருகளைக் காணும்போது சலாம் சொல்லுவது அவர்கள் உயிருடன் உள்ளனர் என்ற பொருளில் அல்ல, ஏனென்றால் இந்த சலாம் அவ்லியாக்களுக்கு மட்டும் உரியது அல்ல. எந்த முஸ்லிமின் கப்ரைக் காணும்போதும், இப்படிச் சொல்ல வேண்டும் என்பது தான் ஹதீஸின் கருத்து. அதுவும் “கப்ருவாசிகளே! உங்கள் மீது சலாம் உண்டாகட்டும்! நீங்கள் முந்தி விட்டீர்கள். நாங்களும் உங்களுடன் வந்து சேரக் கூடியவர்கள் தான்” என்று இந்த வசனத்தையும் சேர்த்து சொல்ல வேண்டும். நாம் நம் மரணத்தை நினைவுப்படுத்திக் கொள்வதற்காக இதனைச் சொல்ல வேண்டும். நம்முடைய ஸலாம் அவர்கள் செவியில் கேட்கும் என்பது அதன் பொருள் அல்ல. “தென்றல் காற்றே! கொஞசம் நில்லு!” என்று இலக்கியமாக நாம் அழைக்கிறோம் என்றால் தென்றல் காற்றுக்கு இந்த அழைப்பு புரியும் என்பது அதன் பொருள் அல்ல. தென்றல் காற்றை அழைப்பது போல் பாவனை செய்கிறோம், அது போன்ற இலக்கியம்தான் இதுவும்.

அதனால் முதல் கூட்டத்தினரின் வாதம் மிகவும் பலவீனமானது என்பது நமக்கு நன்கு புலனாகிறது. இரண்டாவது சாரார் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் முற்றிலும் அந்த வாதத்தை முறியடித்து விடுகின்றது. அவர்களின் ஆதாரங்களைப் பார்ப்போம்.

ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைக் கட்டாயம் சுவைத்தே கீர வேண்டும்”. (அல்குர்ஆன் 3-185, 21-35, 29-57)

“ஒவ்வொரு” என்ற பதம் எந்த மனிதரையும் இந்த முடிவிலிருந்து நீக்க முடியாத, விதிவிலக்குப் பெற முடியாத விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது, எனவே எல்லோரும் இறந்து விட்டவர்கள் என்பது தெளிவாகின்றது.

ஒரு வாதத்திற்காக, சிலரை இந்த விதியிலிருந்து நீக்கலாம் என்றால் அந்தஸ்தில், வலிமார்கள் எட்ட முடியாத உன்னதமான உயர்வு பெற்ற நபிமார்களுக்கு அந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருக்குர்ஆனே மிகத் தெளிவாக நபிமார்களும் மரணித்தவர்கள் என்பதை ஐயத்திற்கிடமின்றி தெளிவாக்குகின்றது. அந்த வசனங்களை நாம் பார்ப்போம். நபி சுலைமான் (அலை) அவர்கள் ‘பைத்துல் முகத்தஸ்’ கட்டிடத்தைக் கட்டிக் கொண்டிருக்கும்போது மரணித்து விடுகிறார்கள். அவர்கள் மரணித்தது தெரியாமல் ஜின்கள் அந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணியைச் செய்து கொண்டிருக்கின்றன. பல நாட்கள் கைத்தடியை ஊன்றியவராக அவர்கள் மரணித்த நிலையில் நிற்கிறார்கள். இந்த நிலையில் அவர்களின் கைத்தடியை கரையான்கள் அரித்துக்கொண்டு வந்தபோது, தீடிரென அவர்கள் கீழே விழுகிறார்கள். அப்போதுதான் ஜின்களுக்கு சுலைமான் நபி இறந்து விழுகிறார்கள். அப்போதுதான் ஜின்களுக்கு சுலைமான் நபி இறந்து விட்டார்கள் என்ற உண்மை தெரிகிறது. இதனை குர்ஆன் சுலைமான் மீது நாம் மவ்த்தை விதித்தபோது, அவர் இறந்துவிட்டார் என்பதை கரையான்களத் தவிர வேறெவரும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை.” (அல்குர்ஆன் 34 -14)

இந்த வசனம் சுலைமான் நபிக்கு மரணம் சம்பவித்தது என்பதை “மவ்த்து” என்ற வார்த்தையின் மூலம் தெளிவாக்குகின்றது.

“யஃகூபிற்கு மரணம் வந்தபோது” (அல்குர்ஆன் 2 – 133) என்ற வசனத்திலும் “மவ்த்து” என்ற பதத்தை அல்லாஹ் பிரயோகம் செய்திருக்கிறான். மிகப் பெரும் இரண்டு நபிமார்களும் இறந்து விட்டனர் மவ்தாகி விட்டனர் என்றால், வலிமார்கள் எம்மாத்திரம்?

மேலும் நபிமார்களின் தலைவராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி “நபியே நீயும் மரணிக்கக்கூடியவர். உமக்கு முன் வந்த நபிமார்களும் மரணித்து விட்டார்கள்,” (அல்குர்ஆன்29 -30)

ஹழரத் ரசூல் (ஸல்) அவர்களே மரணித்து விட்டவர்கள் என்றால் வேறு யார்தான் (நம்மவர்களில் சிலர் நினைக்கின்ற பொருளில் உயிருடன் இருக்க முடியும்?)

நபிகள் நாயகம் இறந்துவிட்டபோது, பலரும் “அவர்கள் இறக்கவில்லை” என்று எண்ணியபோது அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் “முஹம்மதை வணங்குபவர்கள் யாரேனுமிருந்தால் (அவர்கள் புரிந்து கொள்ளட்டும்!) முஹம்மது நிச்சயம் இறந்து விட்டார்கள்.” என்று சொன்னதும் இங்கே நினைவு கூரத்தக்கது.

அந்நஜாத்: ஜுலை,1986
--------------------------------------------------------------------------------------------------------------------------